Wednesday, January 11, 2023

36.மெய்யுணர்தல்

(நிலையான பொருள் இதுவென்ற உண்மையை உணர்தல்)

அதிகாரம்#36 | அறம் | துறவறவியல் | குறள்கள்#351-360

351
பொருள்அல்ல வற்றைப் பொருள்என்று உணரும்
மருளான்ஆம் மாணாப் பிறப்பு. 

பொருள் அல்லாதனவற்றை, மெய்ப்பொருளென்று தவறாக எண்ணும் மயக்கம் கொண்டவர்கள் இழித்தக்கப் பிறப்பை அடைவர்.

352
இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி
மாசறு காட்சி யவர்க்கு.

அஞ்ஞான மயக்க நிலையினின்று மீண்டு, குற்றமற்ற மெய்யுணர்வை அடையப்பெற்றவர்கள், அறியாமை எனும் இருள் நீங்கி, இன்ப வாழ்வைப் பெறுவர்.

353
ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின் 
வானம் நணியது உடைத்து.

ஐயங்களிலிருந்து நீங்கித் தெளிந்த அறிவின் பயனால், மெய்யுணர்வைப் பெறுவோர்க்கு, இப் பூமியை விடவும், தாம் விரும்பும் வான் உலகம் மிக அருகில் அமையப்பெறும்.  

354
ஐயுணர்வு எய்தியக் கண்ணும் பயம்இன்றே
மெய்உணர்வு இல்லா தவர்க்கு.

ஐம்புலன்களையும் அடக்கி வென்றவரே ஆயினும், அவருக்கு உண்மையை உணர்ந்தறியும் மெய்யறிவு இல்லையெனில், அதனால் ஒரு பயனும் இல்லை.

355
எப்பொருள் எத்தன்மைத்து ஆயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு.

எந்தப் பொருளாயினும், அது எத்தகைய தன்மையுடைத்தாயினும், அப்பொருளின் இயல்பை உணர்த்தும் உண்மைத் தன்மையை அறிந்திடலே மெய்யுணர்வு ஆகும்.

356
கற்றுஈண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்
மற்றுஈண்டு வாரா நெறி.

கற்பவை எல்லாம் கற்று உணர்ந்து, இப் பிறப்பில் மெய்ப்பொருளைக் கண்டவர், மீண்டும் இங்கே பிறவாத வழிகாட்டும் நெறி கொண்டு வாழ்வர்.

357
ஓர்த்துஉள்ளம் உள்ளது உணரின் ஒருதலையாப்
பேர்த்துஉள்ள வேண்டா பிறப்பு.

உள்ளத்தால் ஆராய்ந்து உண்மைப் பொருளை உறுதிபட உணர்பவர்கள், தமக்கு மீண்டும் ஒரு பிறப்பு உண்டென்று எண்ணிட வேண்டியதில்லை.

358
பிறப்புஎன்னும் பேதைமை நீங்கச் சிறப்புஎன்னும்
செம்பொருள் காண்பது அறிவு.

பிறவி எனும் அறியாமைத் துன்பத்தினின்று விலகிட, மீண்டும் பிறவாமை என்னும் செம்மைப் பொருளை அறிந்து உணர்வதே மெய்யுணர்வாகும்.

359
சார்புஉணர்ந்து சார்பு கெடஒழுகின் மற்றஅழித்துச்
சார்தரா சார்தரு நோய்.

எல்லாப் பொருளின்பால் சார்ந்துள்ள மெய்ப்பொருளை உணர்ந்து, அவற்றின்கண் பற்றின்றி ஒழுகின், நம் ஒழுக்கநெறி அழித்து நம்மைப் பற்றிட வரும் துன்பங்கள், சாராது விலகி விடும்.

360
காமம் வெகுளி மயக்கம் இவை மூன்றன்
நாமம் கெடக்கெடும் நோய்.

ஆசை, வெறுப்பு, மயக்கம் ஆகிய மூன்றன் பெயர்களைக் கூட, தம் உள்ளத்துள் இடம் தராத நெறியுடையவரிடத்தே, அவற்றால் வரக்கூடிய துன்பங்களும் இல்லாது போகும்.

◀|அதிகாரம் 
35.துறவு |
அதிகாரம் 37.அவா அறுத்தல்|►

No comments:

Post a Comment