அதிகாரம்.14 | அறத்துப்பால் | இல்லறவியல் | குறள்கள் 131-140
131
ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்.
எல்லோர்க்கும் மேன்மையைத் தரக் கூடியது ஒழுக்கம்; ஆதலால், அவ் வொழுக்கம் உயிரை விடவும் மேலானதாகப் போற்றப்படும்.
132
பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்தோம்பித்
தேரினும் அஃதே துணை.
ஒருவர் தன் வாழ்வில் வருந்திப் போற்றிக் காத்துக் கொள்ள வேண்டியது ஒழுக்கம்; எல்லா அறங்களையும் ஆராய்ந்து தெளிந்திருப்பினும், அவருக்கு தலைசிறந்த துணையாவது ஒழுக்கமே.
133
ஒழுக்கம் உடைமை குடிமை; இழுக்கம்
இழிந்த பிறப்பாய் விடும்.
ஒழுக்கத்துடன் வாழ்பவர் உயர்குடியினராகக் கருதப்படுவார்; ஒழுக்கம் தவறின், இழிகுலத்தினருக்கு ஒப்பானவர் ஆவார்.
134
மறப்பினும் ஒத்துக் கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்.
தாம் கற்ற வேதங்களை மறந்தாலும், பார்ப்பனன் மீண்டும் கற்றுத் தெளியலாம்; ஆனால், குல ஒழுக்கத்திலிருந்து விலகினால், தம் குலமே தாழ்ந்ததாகி விடும்.
135
அழுக்காறு உடையான்கண் ஆக்கம்போன்று இல்லை
ஒழுக்கம் இலான்கண் உயர்வு.
பொறாமை குணமுடையவர்க்கு செல்வம் நிலைப்பதில்லை; அது போல், ஒழுக்கம் தவறியவர் வாழ்வில் உயர்வு இல்லை.
136
ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் இழுக்கத்தின்
ஏதம் படுபாக்கு அறிந்து.
மனஉறுதி கொண்ட சான்றோர்கள், ஒழுக்கம் தவறுவதால் உண்டாகப்பெறும் இழிநிலையை உணர்ந்திருப்பதால், அவர்கள் ஒழுக்க நெறியிலிருந்து விலக மாட்டார்கள்.
137
ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின்
எய்துவர் எய்தாப் பழி.
ஒழுக்கத்தைக் கடைபிடிப்பவர்கள், வாழ்வில் மேன்மை அடைவர்; ஒழுக்க நெறி தவறி நடப்பவர்கள், அடையக் கூடாத பெரும்பழிக்கு ஆளாவர்.
138
நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம்
என்றும் இடும்பை தரும்.
நல்லொழுக்கம் நன்மைக்கு வித்திட்டு நல்வாழ்வைத் தரும்; தீயொழுக்கம் என்றும் தீராதத் துன்பத்தையே விளைவிக்கும்.
139
ஒழுக்கம் உடையவர்க்கு ஒல்லாவே தீய
வழுக்கியும் வாயாற் சொலல்.
ஒழுக்கம் உடையவர்கள், மறந்தும் கூட தீமை தரும் சொற்களைக் கூற இயலாத பண்புடையவர்கள் ஆவர்.
140
உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்
கல்லார் அறிவிலா தார்.
உலகத்தில் ஒழுக்கமுடைய சான்றோரோடு, ஒன்றி வாழத்தக்க நற்பண்புகளைக் கற்றுக் கொள்ளாதவர்கள், பல நூல்கள் கற்றவரேயாயினும், அறிவில்லாதவர் ஆவார்.
No comments:
Post a Comment