(பிறனிடத்தே கையேந்தி இரத்தலுக்கு அஞ்சுதல்)
அதிகாரம்: 107. இரவச்சம்
பால் வகை: 2. பொருள்
இயல்: 11. குடியியல்
1061
கரவாது உவந்தீயும் கண்ணன்னார் கண்ணும்
இரவாமை கோடி உறும்.
ஒளிவு மறைவின்றி மனம் உவந்து பிறருக்கு உதவும் உள்ளம் கொண்டோரிடத்தும் இரவாமை என்பது கோடி நன்மையாகும்.
1062
இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக உலகியற்றி யான்.
பிறரிடம் கையேந்தி உயிர் வாழ்ந்திடல் வேண்டும் என்ற நிலை இருப்பின், அதற்காக இவ்வுலகை படைத்தவனும் அலைந்து கெடட்டும்.
1063
இன்மை இடும்பை இரந்துதீர் வாமென்னும்
வன்மையின் வன்பாட்ட தில்.
வறுமை நிலையினால் வரும் துன்பத்தை, பிறரிடம் இரந்து போக்கி விடலாம் என எண்ணிடல் கொடிதிலும் கொடிது ஆகும்.
1064
இடமெல்லாம் கொள்ளாத் தகைத்தே இடமில்லாக்
காலும் இரவொல்லாச் சால்பு.
வறுமையினால் வாழ்ந்திட வழியில்லா நிலையிலும், பிறனிடத்தே கையேந்தி இரவாத குணத்திற்கு இவ்வுலகே ஈடாகாது.
1065
தெண்ணீர் அடுபுற்கை ஆயினும் தாள்தந்தது
உண்ணலின் ஊங்கினிய தில்.
தெள்ளிய நீர் போன்ற கூழ் ஆயினும், தன் முயற்சியால் உழைத்து சமைத்து உண்ணுதலைக் காட்டிலும் இனிதாவது எதுவும் இல்லை.
1066
ஆவிற்கு நீரென்று இரப்பினும் நாவிற்கு
இரவின் இளிவந்த தில்.
பசுவிற்காக நீர் வேண்டுமென பிறரிடம் இரத்தலும் கூட, அந்நாவிற்கு இழிவானது வேறொன்றுமில்லை.
1067
இரப்பன் இரப்பாரை எல்லாம் இரப்பின்
கரப்பார் இரவன்மின் என்று.
தம் பொருளை ஒளித்து இல்லை என்பாரிடம் கையேந்தி இரத்தல் வேண்டாமென்று இரப்போரை நோக்கி இரந்து கேட்கிறேன்.
1068
இரவென்னும் ஏமாப்பில் தோணி கரவென்னும்
பார்தாக்கப் பக்கு விடும்.
ஒருவன் வறுமை எனும் கடலை கடந்திட மேற்கொண்ட இரத்தல் எனும் பாதுகாப்பற்ற தோணி, இருப்பதை மறைத்து இல்லை என்பதான பாறையோடு மோதி அழிந்து போகும்.
1069
இரவுள்ள உள்ளம் உருகும் கரவுள்ள
உள்ளதூஉம் இன்றிக் கெடும்.
கையேந்தி இரக்கும் கொடிய நிலையை நினைக்குங்கால் உள்ளமே கசிந்துருகும்; தன்னிடம் இருந்தும் இல்லை என்று சொல்வோரை எண்ணும்போதோ அதே உள்ளம் உருகிட வழியின்றி அழிந்து போகும்.
1070
கரப்பவர்க்கு யாங்கொளிக்கும் கொல்லோ இரப்பவர்
சொல்லாடப் போஒம் உயிர்.
இருந்தும் இல்லையென்று சொல்லுவதை இரந்தவர் கேட்குங்கால் போய்விடும் உயிர், இல்லை என்பார்க்கு மட்டும் போய்விடாது எங்கோ ஒளிந்து விடுகிறதே.
No comments:
Post a Comment