(இரந்து பிச்சை மேற்கொள்ளல்)
அதிகாரம்: 106. இரவு | பொருட்பா | குடியியல்
1051
இரக்க இரத்தக்கார்க் காணின் கரப்பின்
அவர்பழி தம்பழி அன்று.
இல்லாதவர் கையேந்தி கேட்கும் போது இருப்பவரிடத்தே எல்லாம் இருந்தும் இல்லை என்று சொன்னால், அவருக்குத்தான் பழியே அன்றி கேட்போருக்கு இல்லை.
1052
இன்பம் ஒருவற்கு இரத்தல் இரந்தவை
துன்பம் உறாஅ வரின்.
ஒருவர் இரந்து கேட்டு அப்பொருள் துன்பமின்றி கிடைக்குமாயின், அந்த இரத்தலினால் கொடுத்தவருக்கும் இன்பமே.
1053
கரப்பிலா நெஞ்சின் கடனறிவார் முன்நின்று
இரப்புமோ ரேஎர் உடைத்து.
தம் பொருளை ஒளிக்காத நெஞ்சமும், இரத்தலை தம் கடமையென்றும் கொண்டவரின் முன் நின்று பொருள் கேட்டு இரத்தல் பெருமை உடையதேயாகும்.
1054
இரத்தலும் ஈதலே போலும் கரத்தல்
கனவிலும் தேற்றாதார் மாட்டு.
ஒளித்து மறைத்து தம்மிடம் இல்லை என்று கூறும் தன்மை அறவே இல்லாதவரிடத்தே பொருள் கேட்பதும் பிறருக்கு ஈவது போன்றதாகும்.
1055
கரப்பிலார் வையகத்து உண்மையால் கண்ணின்று
இரப்பவர் மேற்கொள் வது.
தம்மிடம் இல்லையென்று உள்ளதை மறைக்காத உள்ளம் கொண்ட பண்புடையவர்கள் இவ்வுலகில் இருப்பதால் தான், இல்லாத வறியவர்கள் அவர்களிடத்தே இரந்து கேட்கின்றனர்.
1056
கரப்பிடும்பை யில்லாரைக் காணின் நிரப்பிடும்பை
எல்லாம் ஒருங்கு கெடும்.
இருப்பதைக் கொடுத்திட மனமின்றி மறைத்திடும் கொடுங்குணம் இல்லாதவரைக் கண்டாலே வறியோரின் துன்பங்கள் யாவும் ஒழிந்து போகும்.
1057
இகழ்ந்தெள்ளாது ஈவாரைக் காணின் மகிழ்ந்துள்ளம்
உள்ளுள் உவப்பது உடைத்து.
தம்மிடம் இரப்போரை இகழாது ஏளனம் பேசாது மனமுவந்து வாரி வழங்கும் தன்மை உடையவரை காணும் எளியோர் உள்ளத்துள் மகிழ்ச்சி கொண்டு இன்புறுவர்.
1058
இரப்பாரை இல்லாயின் ஈர்ங்கண்மா ஞாலம்
மரப்பாவை சென்றுவந் தற்று.
வறுமையால் பிறரிடத்தே இரப்பவர்கள் இல்லாதாயின், இப்பேருலகில் அனைவரும் மரப்பாவையில் இயங்குதல் போன்றதாகும்.
1059
ஈவார்கண் என்னுண்டாம் தோற்றம் இரந்துகோள்
மேவார் இலாஅக் கடை.
பொருள் வேண்டி நம்மிடம் இரந்து கேட்க ஒருவரும் இல்லாது போனால், ஈந்து கொடுக்கும் மனம் உள்ளவருக்கு புகழ் எங்ஙனம் வாய்க்கும்?
1060
இரப்பான் வெகுளாமை வேண்டும் நிரப்பிடும்பை
தானேயும் சாலும் கரி.
தம்மிடம் பொருள் வேண்டி இரந்து நிற்பவரிடத்தே கோபம் கொள்ளுதல் கூடாது; அவன் கொண்ட வறுமைத் துயரமே சான்றாகும்.
No comments:
Post a Comment