அதிகாரம்: 104. உழவுபால் வகை: 2. பொருள்
இயல்: 11. குடியியல்
1031
சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை.
இவ்வுலகம் பல தொழில்கள் செய்வதால் சுழன்றிடனும், உழவுத் தொழிலுக்கு பின்னால் சுழல வேண்டியுள்ளது; அதனால் என்ன துயர் வந்தாலும் உழவு தொழில் ஒன்றே தலை சிறந்ததாகும்.
1032
உழுவார் உலகத்தார்க்கு ஆணிஅஃ தாற்றாது
எழுவாரை எல்லாம் பொறுத்து.
உழவுத் தொழில் அன்றி, வேறு தொழில் புரிவோரை உழவர்களே தாங்கி நிற்பதால் அவர்களே உலகின் அச்சாணி ஆவார்.
1033
உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர்.
உழவுத் தொழில் செய்து வாழ்பவரே இவ்வுலகில் வாழ்பவர் ஆவார்; மற்றையோர், அவரைத் தொழுது அவர் பின்னே செல்பவர் ஆவர்.
1034
பலகுடை நீழலும் தங்குடைக்கீழ்க் காண்பர்
அலகுடை நீழ லவர்.
உழவின் வலிமையால் வளம் வழங்கும் உழவர் பெருமக்கள், பல அரசாட்சிகளின் நிழல்களைத் தம் அரசாட்சியின் நிழலுக்குள் கொண்டு வரத்தக்க வல்லமை கொண்டவர்களாவர்.
1035
இரவார் இரப்பார்க்கொன்று ஈவர் கரவாது
கைசெய்தூண் மாலை யவர்.
தம் கைக் கொண்டு உழைத்து உண்ணும் உழவர் பெருமக்கள் பிறரிடம் இரந்து உண்ண மாட்டார்; தம்மிடம் இரந்து கேட்போருக்கும் இல்லை எனச் சொல்லாது, வழங்கி மகிழ்வர்.
1036
உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம்
விட்டேம்என் பார்க்கும் நிலை.
உழவர் பெருமக்கள் தம் தொழிலைக் கைவிட்டு விடுவாராயின, எல்லாம் துறந்த துறவியர்க்கும் வாழ்வில்லாது போய்விடும்.
1037
தொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்தெருவும்
வேண்டாது சாலப் படும்.
ஒரு பலம் புழுதி கால் பலம் ஆகும் அளவில் உழவு செய்து காய விட்டு பின்னர் பயிர் செய்தால், அது செழித்து வளர ஒரு பிடி எருவும் தேவையன்று.
1038
ஏரினும் நன்றால் எருவிடுதல் கட்டபின்
நீரினும் நன்றதன் காப்பு.
உழுதலைக் காட்டிலும், எரு இடுதல் நன்று; நீர் பாய்ச்சுதலைக் காட்டிலும் பயிரைப் பாதுகாத்தல் நன்றாம்.
1039
செல்லான் கிழவன் இருப்பின் நிலம்புலந்து
இல்லாளின் ஊடி விடும்.
உழவன் தினந்தோறும் தன் நிலத்திற்குச் சென்று உரிய கடமையாற்றாவிடில் அந்நிலமானது, கடமை தவறிய கணவனை மனதால் வெறுப்புற்று விலகிவிடும் மனைவியைப் போல் பயனற்றுப் போகும்.
1040
இலமென்று அசைஇ இருப்பாரைக் காணின்
நிலமென்னும் நல்லாள் நகும்.
வாழ்ந்திட வழிவகை ஏதுமில்லா ஏழையெனத் தம்மை நினைந்து சோம்பித் திரிவோரைப் பார்த்து நிலம் எனும் நன்மகள் கேலியாய் சிரிப்பாள்.
No comments:
Post a Comment